இந்த சின்ன விஷயத்துக்கு போய்….
பகுதி 1
எனது நண்பர் ஒருவரின் தந்தையாரை பாதை கடவையில் விபத்துக்குள்ளாக்கி, காலை முறித்த, பிரதான வங்கியொன்றின் உயர் அதிகாரி இப்படி சொன்னார் “இது ஒரு சின்ன விஷயம்தானே! இதுகு போய்….”
விபத்துக்குள்ளான தந்தைக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எப்படியிருக்கும் இந்த உயர் அதிகாரியின் பேச்சு என்று சிந்தித்துப் பாருங்கள். தண்டனை பெறவேண்டிய இந்த அதிகாரி தான் செய்த தவறை எவ்வளவு சூட்சமாக மறைக்கிறார் என்பதை உணரும் போது எப்படியிருக்கிறது. தான் தவறு செய்யவில்லையென்று நேரடியாக வாதாடமுடியாததால் இப்படியான சாதூர்யமான முறையில் தவறை மறைக்கிறவர்களாக பலரும் இருக்கின்றனர்.
ஒருமுறை எனது இன்னுமொரு நண்பர் தனது இரு சக்கர வண்டியில் பயணிக்கும்போது ஒரு பெண்ணின் கைப்பை அவர் வண்டியில் சிக்கியது. நண்பர் மீது தவறு இல்லாமல் இருந்தும் மனிதாபிமானமாக அவர் அந்த பெண்ணிடம் மன்னிப்புக்கோரினார். அதற்கு அந்த பெண்ணோ கெட்ட வார்த்தைகளால் எனது நண்பரை திட்டித்தீர்த்து விட்டார். அந்த கெட்ட வார்த்தைகள் காரணமாக, அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கொடுக்க என் நண்பருக்கு சில நாட்கள் சென்றதாக கூறினார்.
இந்த இரண்டு சம்பவங்களை பார்க்கும் போது, ஒருவர் தவறு செய்தும் அது தவறில்லை என்று மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கிறார். மற்றவர் தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்டு மன்னிக்கப்படாமல் இருக்கிறார். இவர்களில் யார் செய்தது சரியானது என்று பார்ப்பதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். நாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்பதே நோக்கமாகும்.
கணவன் எப்பொழுதும் மனைவி தன்னை மன்னிக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார். பிள்ளைகள் எப்பொழுதும் பெற்றோர் தங்களை மன்னிக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மனைவியை மன்னிக்க கணவரோ பெற்றோரை மன்னிக்க பிள்ளைகளோ அநேக நேரம் ஆயத்தமில்லை என்பது வேதனைக்குரிய காரியமாகும். மேலும் கணவர் மனைவியிடமோ பிள்ளைகள் பெற்றோரிடமோ மன்னிப்பு கேட்பதும் மிக மிகக்குறைவாகவே எங்கள் குடும்பங்களில் அவதானிக்கமுடிகிறது.
நமது உள்ளங்களை ஆராய்ந்து அறியும் இறைவனை தொழுதுகொள்ளும் நாம் சமுதாயத்தில் உண்மைத்துவம் இல்லாமல் மன்னிக்கமுடியாமல் முகஸ்துதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது அர்த்தமற்ற வாழ்க்கையாகும். வாழ்க்கையில் குடும்பத்தில் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கவேண்டுமானால் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவேண்டும். சிலருக்கு அப்படி செய்த தவறை ஏற்றுகொண்டு மன்னிப்பு கேட்பதற்கு வெட்கம்! அதனால் சாட்டுப்போக்கு சொல்லி தங்களை நல்லவராக காட்டிக்கொள்கிறார்கள். சில தகப்பன்மார் தங்களின் வரட்டு கௌரவத்தினிமித்தம் குரலை உயர்த்திப் பேசி, தாம் செய்த தவறை மறைத்து, மனைவி பிள்ளைகளுக்கு தன்னைப்பற்றிய பயத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு, தற்பெருமை போன்ற பல காரணங்களால் பலரும் தங்கள் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்காமல் அவற்றை மறைத்துவிடுகின்றனர். உண்மையில் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
ஈஸா அல் மஸீஹ் சிலுவையில் குர்பான் கொடுக்கப்படுவதற்காக சிறைப்பிடிக்கப்படுகிற சம்பவத்தை கொஞ்சம் உங்கள் சிந்தனைக்கு கொண்டு வாருங்கள். பாவமறியா பரிசுத்தர் ஈஸா அல் மஸீஹ் என்பது எங்களுக்குத் தெரியும். சிலுவையி்ல் அறைவது என்பது இனியில்லா பாவம் என்று நியாயம் தீர்க்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையாகும். யூதர்கள் இதனை சாபமாகவே கருதினார்கள் என்று இறைவேதத்தில் நாங்கள் வாசிக்கிறோம். அப்படிப்பட்ட சாபகேட்டுக்குள்ளான ஈஸா அல் மஸீஹ் செய்த பாவம்தான் என்ன?
ஷரீஆவை கொடுத்த இறைவன் அந்த ஷரீஆவை பூரணப்படுத்தவே ஈஸா அல் மஸீஹை குர்பான் கொடுத்தார். அதாவது நானும் நீங்களும் செய்த செய்கிற பாவங்கள் தவறுகளுக்கான தண்டனையாக பாவ நிவாரண குர்பானானார் ஈஸா அல் மஸீஹ். நமது தவறுகளுக்காக ஈஸா அல் மஸீஹ் நாம் செலுத்தவேண்டிய குர்பானை அவர் கொடுத்து, நமது பாவத்துக்காக நாம் மரிக்கவேண்டிய இடத்தில் அவர் மரித்து நம்மை விடுவித்திருக்கிறார். இதனை நன்றாக அறிந்தவர்களாக இருக்கும் நாம் மீண்டும் ஒரு தவறு நடக்கும் போது, மன்னிப்புக்கேட்டு, எனக்காக குர்பானான ஈஸாவுக்குள் அதனை செலுத்தி, பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ள மறந்துவிடுகிறோம்!.
இந்த சத்தியத்தை நாங்கள் தினமும் நமது சிந்தையில் வைத்திருந்தால் யாரிடமும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செய்த தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக்கேட்க தயங்கமாட்டோம். பாவத்தை மறைக்க சாட்டுபோக்கு சொல்லவும் மாட்டோம்.
கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவும் மன்னிக்கவும் பழகிக்கொள்ளவேண்டும். அதாவது தங்கள் இருவரின் பாவங்களுக்கும் செலுத்தவேண்டிய குர்பானை ஈஸா அல் மஸீஹ் செலுத்திவிட்டார். ஆகவே மன்னிப்பு கேட்பதற்கு தயங்கவோ வெட்கப்படவோ கூடாது. தைரியமாக நமக்காக செலுத்தப்பட்ட குர்பானின் பாயிதாவை பெற்றுக்கொள்ளவேண்டும். மகிழ்ச்சியான குடும்பத்தின் இரகசியம் இதுவேயாகும்.
தொடரும்…
wonderful article bro.