இறைவேதம் என்றால் என்ன? பகுதி 1.

அறிமுகம்
 
 
அன்பு சகோதர சகோதரிகளே,
 
புனித கிதாப்பாகிய (புத்தகம்) வேதாகம விசுவாச பாடத்திற்கு நாங்கள் உங்களை அன்புடன் வர வேற்கின்றோம். கி.பி 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல்யமான ஒரு முஸ்லீம் கவிஞரான ஜாலாலுத்தீன் ரூமி என்பவர; இருட்டறையில் இருந்த யானையைப் பார்க்கச் சென்ற சில மனிதர்களை குறித்து ஒரு கதையைக் கூறினார்: “சில மனிதர்கள் அரேபிய தீபகற்பத்திற்கு ஒரு யானையை கொண்டு வந்திருந்தார்கள். இருட்டறையில் வைக்கப்பட்டிருந்த இந்த யானையை பார்ப்பதற்கு அநேக அராபியர்கள் சென்றனர். அந்த யானை வைக்கப்பட்டிருந்த அறை இருளாய் இருந்தப்படியினால் அங்கு சென்றவர்களால் அதை தெளிவாய் பார்க்க முடியவில்லை. தடவியே அறியக்கூடியதாய் இருந்தது. ஒருவர் யானையின் தும்பிக்கையை தடவிப்பார்த்துவிட்டு யானை ஒரு குழாய் எனும் முடிவுக்கு வந்தார். இன்னொருவர் அதன் காதை தொட்டுப்பார்த்துவிட்டு யானை ஒரு காற்றாடி என முடிவு செய்தார். வேறு சிலரும் அதன் வயிற்றை தடவிப் பார்த்துவிட்டு யானை ஒரு சுவர் என்றனர். இன்னும் சிலர் அதனுடைய காலை தொட்டுப்பார்த்துவிட்டு ‘அது ஒரு பெரிய மரம்’ என்றனர். இன்னும் சிலர் அதன் வாலை தொட்டுப்பார்த்துவிட்டு ‘யானை ஒரு கயிறு’ என்றனர். ஆனால், இங்கு நடந்தது என்னவென்றால், உண்மையாக யாரும் யானையை அது இருக்கும் வண்ணமாக பார்க்கவில்லை. மாறாக அதனுடைய சிறு சிறு பகுதிகளை மாத்திரமே பார்த்து அதற்கேற்ப முடிவு செய்தனர்.
 
இந்த வேத பாடமானது இறைவாக்காம் புனித கிதாப்பாகிய இறைவேதத்தின் சத்தியங்களை தெளிவாக காணும் பொருட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டிருக்கின்றது. வித்தியாசமான கிறிஸ்தவ ஜமாத்துக்கள் வித்தியாசமான பாரம்பரியங்களைக் கொண்டிருக்கலாம், ஆனாலும், அனைத்து ஜமாத்துக்களும் இறைவாக்கான புனித இறைவேதத்தின் அடிப்படை போதனையையே தங்கள் விசுவாசத்திற்கு (ஈமானுக்கு) அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த இறைவாக்கான புனித இறைவேதத்தில் நீங்கள் கண்டடையும் செய்தியானது கிறிஸ்தவ வழியை குறித்து இப்பொழுது நீங்கள் கொண்டிருக்கும் கருத்தை விட வித்தியாசமான ஒரு கருத்தை தருவதை நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்.
 
இது சற்று புரிந்துக்கொள்ள கூடிய ஒன்றாய் இருக்கின்றது. அதாவது இறைவாக்கான புனித இறைவேதத்தின் அடிப்படையில் கிறிஸ்தவ மார்க்கத்தின் விசுவாசத்தைக் குறித்த உங்களுடைய அறிவு இல்லாது விடத்து, மேற்கண்டவாறு அதை பிழையாக நீங்கள் புரிந்துக்கொண்டிருந்தது இயல்பே. சூறா 10:94 ‘(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது – எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.” இந்த குர்’ஆன் வாக்கியம் கூறும் வண்ணமாக ஒரு முஸ்லீம் இறைவாக்கான புனித இறைவேதத்தின் வெளிப் படுத்தலைக் குறித்து ஒரு கிறிஸ்தவரிடம் விசாரிப்பது நல்லது.
 
உண்மையாக இந்த பாடமானது இறைவேதத்தை குறித்த ஆழமான எல்லா விபரங்களையும் எங்களுக்கு அளிக்கவில்லை. தொடர்ந்து நீங்கள் படிப்பதற்கு தேவையான அத்திவாரத்தையே இந்த பாடமானது உங்களுக்கு வழங்குகின்றது. இறைவாக்கான இந்த புனித வேதாகமத்தை கற்றுக்கொள்வதற்கூடாக ஏன் அநேகர் ஒரு புதிய வாழ்ககையை அனுபவிக்கின்றார்கள், ஏன் ஒரு மகத்துவமான மகிழ்ச்சியை அனுபவிக் கின்றார்கள் என்பதை நீங்கள் கண்டுக்கொள்ளலாம். இந்த பாடத்தின் ஒவ்வொரு பாட முடிவிலும் பரீட்சைப் பகுதி என்று ஒன்று இருப்பதை நீங்கள் அவதானிப்பீர்கள். நீங்கள் இந்த பாடத்தில் கற்றுக்கொண்டதை திரும்பவும் நன்றாக புரிந்துக் கொள்வதற்கு இந்த பரீட்சை பகுதியானது உங்களுக்கு உதவி செய்கின்றது.
 
 
 
விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம்: 1
 
புனித இறைவேதம் (1)
 
(புனித இறைவேதம் ஒரு நூலகம்: பழைய ஏற்பாடு)
 
இறை வாக்கான புனித இறைவேதத்தை கற்றுக் கொள்ளாமல் கிறிஸ்தவத்தையும், புனித இறைவேதத்தின் விசுவாசத்தையும் குறித்து கற்றுக்கொள்வது இயலாத காரியம். நீங்கள் திறந்த மனதோடு இந்த பாடத்தை கற்க எமக்கு வழங்கும் ஒத்துழைப்பை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். நீங்கள் ஒரு போதும் இதை குறித்து மனவருத்தப்பட மாட்டீர்கள். இவ்வுலகில் எழுதப்பட்ட எந்த புத்தகத்தை விடவும் இறைவாக்கான புனித வேதாகமமே உலகத்தின் அநேக மொழிகளுக்கு மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த பாடத்தில் நாம் தமிழ் வேதாகமத்திலிருந்து மேற்கோள்களை காட்டியிருக்கின்றோம்.
 
புனித இறைவேதம் ஒரு நூலகம்
 
நீங்கள் உங்கள் கரத்திலிருக்கும் இறைவாக்கான புனித இறைவேதத்தை திறக்கும் பொழுது அதன் முதல் பக்கத்தில் வேதாகம புத்தக அட்டவணை கொடுக்கப் பட்டிருக்கும். அவை, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் புத்தக ஒழுங்குகள் கொடுக்கப் பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். பழைய ஏற்பாடானது 39 புத்தகங்களையும் புதிய ஏற்பாடானது 27 புத்தகங்களையும் கொண்டிருக்கின்றன.  எனவே, புனித வேதாகமம் ஒரு தனி புத்தகமல்ல அது இரண்டு அட்டைகளுக் கிடையில் 66 வித்தியாசமான புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகமாகும். முதல் பக்கத்திலிருக்கும் இந்த உள்ளடக்கத்துக்கூடாக நீங்கள் செல்வீர்களேயானால் நீங்கள் இந்த பாடத்தில் வாசிக்கும் இறை வசனங்கள் பழைய ஏற்பாட்டை சேர்ந்ததா அல்லது புதிய ஏற்பாட்டை சேர்ந்ததா என்பதை கண்டுக்கொள்வீர்கள். நாங்கள் வேத வசனங்களை பின்வருமாறு வழங்கியிருக்கின்றோம், உதாரணமாக 1சாமுவேல் 3:4-14. இங்கு 1சாமுவேல் என்பது புத்தகத்தைக் குறிக்கின்றது. 3 என்பது ஒரு புத்தகத்திலுள்ள அதிகாரத்தை குறிக்கின்றது. 4-14 என்பது அந்த அதிகாரத்திலுள்ள வசனங்களைக் குறிக்கின்றது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
பழைய ஏற்பாட்டு புத்தகங்கள்
 
பழைய ஏற்பாடு என்ற சொல்லானது ஈசா அல்-மஸீஹ் அவர்களுக்கு முன்பிருந்த ஜனங்களுக்கு அருளப்பட்ட இறைவாக்கு அடங்கிய புத்தகங்களை உள்ளடக்கியிருக்கும் சொல்லாய் இருக்கின்றது. ஏற்பாடு என்ற சொல் உடன்படிக்கை என்றும் அழைக்கப்பட முடியும். ஏனென்றால் இறைவன் இப்றாஹீம் (அலை) அவர்களோடும் அவருடைய சந்ததியாரோடும் உடன்படிக்கைகள் செய்தான். இந்த உடன்படிக்கை யானது  தன்னை தொழுது கொள்வதற்கும் பனீ இஸ்ராயீல் மக்கள் அவா்களுடைய முன்மாதிரியான வாழ்க்கைக் கூடாக மற்ற மக்களையும் அவா்களுடைய இறைவனிடம் வழிநடத்துவதற்கென்றும் மூசா (அலை) அவர்களுக் கூடாக பனீ இஸ்ராயீல் ஜனங்களோடு புதிப்பிக்கப்பட்டது. ஈசா அல் மஸீஹ் ஒரு புதிய உடன்படிக்கையை அறிமுகப்படுத்தினார், இது எல்லா மக்களும் உயிருள்ள இறைவனை தொழுது கொள்வதற்கு அழைக்கும் ஒரு உடன்படிக்கையாகும். புனித வேதாகமம் கொண்டிருக்கும் செய்தியானது கால வரையறையற்றது. அனைத்து மூஃமீன்களுக்கும் உரியதாகும். பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் பின்வரும் வரிசைக்கிரமத்தில் அமைந்திருக்கின்றன:
 
1.     ‘மூசாவின் புத்தகங்கள்” (தௌராத்) எபிரேய மொழியில் சட்டம்  என்று பொருள்ப்படும். இது ஆதியாகமம் தொடங்க உபாகமம் வரையிலான 5 புத்தகங்களை குறிக்கும்.
 
·     ஆதியாகமம் (ஆரம்பம்), இந்த புத்தகத்தில் நாம் இப்பிரபஞ்சத்தினதும்    அதிலுள்ள அனைத்தினதும் சிருஷ்டிப்பைக் குறித்தும், உலகத்தின் முதல் மனிதனாகிய ஆதம் (அலை), முதல் பெண் ஹவ்வா (அலை), அவருக்கு பின்வந்த நூஹ் (அலை), இப்றாஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை), இஸ்மாயீல் அலை, யஃக்கூப் (அலை) அவரகளுடைய புதல்வர்களான பனீ இஸ்றாயீலினரின் கதைகளையும் கற்றுக் கொள்கின்றோம்.
 
·         யாத்திராகமம் (வெளியேறுதல், அல்லது மாபெரும் புறப்பாடு), இந்த புத்தகத்தில் மூசாவின் தலைமைத்துவத்தின் கீழ் இறைவன் எவ்வாறு பனீ இஸ்றாயீல் மக்களை அற்புதமான விதத்தில் எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டு வந்தான், செங்கடலை கடக்கச் செய்தான். சீனாய் மலையில் வைத்து பத்து கட்டளைகளை அருளினான் என்பதை கற்றுக்கொள்கின்றோம்.
 
·         லேவியராகமம் இந்த புத்தகத்தில் நாம் பனீ இஸ்றாயீலில் ஆசாரியத்துவம் (இறை பணி) எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கான இறைவனின் நியமங்களையும் இறைபணியாளர்களான லேவியர்களை குறித்தும், ஒரு தொகையான எண்ணிக்கையுடைய அறநெறி சட்டங்களோடு இணைத்து எவ்வாறு இறைவனுக்கு தொழுகையையும், காணிக்கைகளையும், (குர்பான்கொடுத்தலையும்) செய்ய வேண்டும் என்பதற்கான இறைவனுடைய நியமங்களையும், பாவ மன்னிப்பு (தௌபாசெய்தல்) பரிசுத்தத்திற்குமான  நியமங்களையும் கற்றுக்கொள்கின்றோம்.
 
·         எண்ணாகமம் இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் பனீ இஸ்றாயீல் மக்கள் மத்தியில் ஒரு குடி மதிப்பு எடுக்கப்பட்டது, அதிலிருந்தே இந்த புத்தகம் எண்ணாகமம் என்ற பெயரை பெற்றுக் கொண்டது. இந்த புத்தகம் சீனாய் வனாந்தரத்திலிருந்து பனீ இஸ்றாயில் சந்ததியினர் தங்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்ட தேசத்தை நோக்கி செய்த பயணத்தையும், பனீ இஸ்றாயீல் மக்களின் பெலவீனத்தையும் அவர்கள் இறைவனுக்கு கீழ்ப்படியாமல் போனதையும் உள்ளடக்கியிருக்கின்றது.
 
·         உபாகமம் (இரண்டாம் சட்டம்) இப்புத்தகமானது ஏற்கனவே கொடுக்கப்பட்ட சட்டத்தை திரும்பவும் ஞாபகப்படுத்தி அதை கைக்கொள்ள வேண்டிய தெய்வீக அறிவுறுத்தல்களையும், கீழ்ப்படிந்து அதை கைக்கொள்வதினால் ஏற்படும் பரக்கத்துக்களையும், கீழ்ப்படியாமையினால் ஏற்படக்கூடிய சாபத்தை பற்றியும் பேசுகின்றது. அதேபோல் இப்புத்தகமானது இறைவனை நேசிக்கும்படியும் இறைவனுடைய அன்பு உண்மைத்துவம் என்பவைகளுக்கு மாறுத்தரவாக  அவனுக்கு கீழ்ப்படியும் படிக்கு மூஃமீன்களுக்கு அழைப்பும் விடுகின்றது.
 
2.  சரித்திர புத்தகங்கள் – இது யோசுவா துவங்க எஸ்தர் வரையும் உள்ள 12 புத்தகங்களை குறிக்கும். இப்புத்தகங்கள் மூசாவின் மரணத்தை தொடர்ந்து 500 வருட வரலாற்றை உள்ளடக்கியிருக்கின்றன. அதாவது மூசாவின் மரணத்திலிருந்து ஈசா அல் மஸீஹ் அவர்களுக்கு முன் 1000ம் ஆண்டு வரையுள்ள வரலாற்றை உள்ளடக்கியிருக்கின்றன.
 
·         யோசுவா இப் புத்தகமானது மூசாவின் மரணத்திற்குப் பின்பு பலஸ்தீனத்தில் பனீ இஸ்றாயீலரை குடியமர்த்திய சம்பவத்தை கொண்டிருக்கின்றது.
 
·         நியாயாதிபதிகள் இப் புத்தகமானது பனீ இஸ்றாயீல் மக்கள் இறைவனுக்கு கீழ்ப் படியாததின் நிமித்தம் ஏற்பட்ட குழப்பத்தில் 400வருட காலம் நியாயாதிபதிகள் அவர்களை ஆளுகை செய்ததை உள்ளடக்கியிருக்கின்றது.
 
·         ரூத் இப் புத்தகமானது நியாயாதிபதிகளின் காலத்தில் பனீ இஸ்றாயீல் அல்லாத ஒரு புற சமயத்து பெண்ணான ரூத் எவ்வாறு மெய்யான இறைவனண்டை வந்தால் எனும் கதையை நமக்கு அறிவிக்கின்றது.
 
·         1, 2சாமுவேல் இப் புத்தகங்கள் சவுல் தாவூது எனும் இரு அரசா்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கின்றன.
 
 
·         1, 2இராஜாக்கள், 1,2நாளாகமம் இப் புத்தகங்கள் தாவூதின் மகனான சுலைமான் அரசனின் வரலாற்றோடு அவரை தொடர்ந்து பனீ இஸ்றாயீலை ஆளுகைச் செய்த அரசா்களின் சரித்திரத்தையும் கி.மு 597ல் பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தினால் எருசலேம் நகரம் கைப்பற்றப்படும் வரையிலுள்ள சரித்திரத்தையும் உள்ளடக்கியிருக்கின்றது.
 
·         எஸ்றா, நெகேமியா இந்த புத்தகங்கள் பாபிலோனிய சிறையிருப்புக்கு பிறகு யகூதிகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சில தலைவர்களின் கீழ் தங்களுடைய தாயகத்திற்கு வந்து எருசலேமையும் (பைத்துல் முகத்தஸ்ஸையும்;) அதன் மதில்களையும் திரும்பவும் கட்டினார்கள் என்பதை விஸ்தரிக்கின்றது.
 
·         எஸ்தர், இந்த புத்தகம் பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்திற்கு பின்பு யகூதிகளை ஆளுகை செய்த பாரசீக (ஈரான்) பேரரசின் காலத்தில் அங்கு வாழ்ந்த ஒரு இஸ்றாயீல் பெண்ணான எஸ்தர் அந்த பேரரசின் பேரரசனால் தெரிவு செய்யப்பட்டு பின்பு எவ்வாறு பேரரசுக்கு அரசியாக மாறினாள் என்பதையும், அதற்கூடாக இறைவன் எவ்வாறு இஸ்றாயீல் மக்களுக்கு ஒரு விடுதலையை அருளினான் என்பதையும் விஸ்தரிக்கின்றது.
 
3.  கவிதை புத்தகங்கள். இப்புத்தகங்கள் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த கவிதை நடையில் எழுதப்பட்டன.
 
·         அய்யூப் (யோபு)  இப்புத்தகம் அய்யூப்  நபி துன்பத்தின் பிரச்சினையோடு இடைப் படுவதையும் அந்த துன்பத்திற்கு பிறகு அவா் பெறும் அனுபவத்தையும் குறித்து பேசுகின்றது.
 
·         ஸபூர் (சங்கீதங்கள்) என்றால் துஆக்களும் துதி பாடல்களும் என்று பொருளாகும். இந்த துஆக்களும் பாடல்களும் வேறும் பலரால் செய்யப்பட்டிருந்த போதிலும் இவைகளில் மிகவும் அதிகமானவை நபியும் இஸ்றாயீலின் அரசருமான தாவூது (அலை) அவர்களாளேயே செய்யப்பட்டன.
 
·         நீதிமொழிகள். இப்புத்தகமானது நாம் நீதியாக நடக்க வேண்டியதன் நடைமுறை அறிவுறுத்தல்களை அளிக்கின்றது.
 
·         பிரசங்கி. இப் புத்தகம், மனிதனுடைய ஞானம் இறைவனுடைய பார்வையில், எவ்வளவு முட்டாள்தனமாய் இருக்கின்றது என்பதை காண்பிக்கின்றது.
 
·          
·         உன்னதப்பாட்டு. இது காதல் பாடல்களின் ஒரு திரட்டு ஆகும்.
 
·         புலம்பல்கள். இது பாபிலோனியர் பைதுல் முகத்தஸை அழித்தபொழுது எரேமியா எனும் நபிக்கு ஏற்பட்ட தாங்க முடியாத துன்பத்தை சித்தரிக்கின்றது.
                                   
4.  நபிமார்களின் புத்தகங்கள். இவை நபிமார் இறைவனின் பட்சத்தில் இறைவனுடைய செய்தியை மக்களுக்கு உரைத்ததை உள்ளடக்கியிருக்கின்றன. இந்த நபிமார்கள் மக்களுக்கு இறை வழிகாட்டுதலையும், இறை எச்சரிக்கையையும் இறை தீர்ப்பையும் கூறினார்கள். அவர்கள் அம் மக்களுக்கு உடனடியாகவும் எதிர்காலத்திலும் நடக்கக் கூடியவற்றை முன்னறிவித்தார்கள். இந் நபிமார்களின் புத்தகங்கள் பின்வரும் விதத்தில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன:
 
·         பெரிய நபிமார்கள்:
 
1. ஏசாயா. இவர் ஒரு நபி. இவர் மூலம்     இறைவன் பனீ இஸ்ராயீல் மக்களுக்கு பல  எச்சரிக்கைகளையும், அவா்களுடைய மனந்திரும்புதலுக் கூடாக அவர்களுக்கு அருளும் மீட்பையும், எதிர்கால சா்வலோக இரட்சகராகிய ஈஸா மஸீஹ்வை குறித்தும், இன்னும் யகூதிகள் அல்லாத பிற இனத்தவா்களின் பாவம் பற்றியும், அதினால்  அவா்கள்மேல் வரும் இறைத்தீர்ப்பு பற்றியும் பேசினார்.
 
2. எரேமியா. இவரும் ஒரு நபி. இவா் மூலமும் இறைவன் பனீ இஸ்றாயீல் ஜனங்களின் பாவங்களையும் அதற்காக இறைவன் அவா்களை யகூதிகள் அல்லாத ஒரு அரசனிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுக்கப் போவதைப் பற்றியும், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அவர்களை திரும்பவும் தங்கள் தாய் நாட்டுக்குக் கொண்டுவருவது பற்றியும் பேசினார்.
 
3. எசேக்கியேல். இவரும் ஒரு நபி. இவர் மூலமும் இறைவன் பனீ இஸ்றாயீல் மக்களின் பாவங்களையும், அவர்களுக்கான தண்டனை, அவர்களுடைய விடுதலை, அவர்களுக்கான வாக்குத்தத்தம் என்பவற்றை வழங்கினான்.
 
4. தானியேல். இவரும் ஒரு நபி. இவர் யகூதிகள் தங்கள் பாவத்தினிமித்தம் யகூதிகள் அல்லாத பாபிலோனிய பேரரசன் நேபுகாத்நேச்சரிடம் இறைவனால் ஒப்புக் கொடுக்கப்பட்டு, அவன் அவர்களை பாபிலோன் தேசத்திற்குக் கொண்டுபோய் அடிமைகளாய் வைத்திருக்கும்போது, அந்த அந்நிய தேசத்தில் இறைவனால் ஒரு நபியாகப் பாவிக்கப்பட்டவராவார். இவர் மூலம் இறைவன், பாபிலோனிய பேரரசின் அழிவையும், அதற்குப் பின்பு வருகின்ற பேரரசுகளையும் அவைகளின் அழிவையும், இறுதியில் இறைவன் எவ்வாறு தனது மஸீஹ்வை அனுப்பி இறை அரசை இவ்வுலகில் ஸ்தாபிக்கப்போகின்றான் என்ற செய்திகளையும் வழங்கினான். 
 
·      12 சிறிய நபிமார்கள்:
 
ஓசியா – மல்கியா. இவா்கள் சிறிய நபிமார்கள் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் இவர்கள் கொண்டுவந்த இறைச் செய்தி (வஹி) குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனும் அர்த்தத்தில் அல்ல, மாறாக இவர்கள் கொண்டுவந்த இறை செய்தியானது பெரிய நபிமார்களின் செய்தியோடு ஒப்பிடும்போது அல்லது அவற்றை எழுத்தில் வடிக்கும்போது அவை குறுகிய பக்கங்களை கொண்டதாய் இருந்ததே காரணமாகும்.
 
பழைய ஏற்பாட்டின் 39 கிதாபுகளும் ஈசா அல் மஸீஹ்க்கு முன் ஏறத்தாழ 2050ம் ஆண்டிலிருந்து ஈசா அல் மஸீஹ்க்கு முன் 400ம் ஆண்டு வரை உள்ள காலத்தில் குறைந்த பட்சம் 32 எழுத்தாளர்களால் எழுதப்பட்டது.
 
 
 
பரீட்சை
 
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.
 
1.     இறைவேதம் என்ன இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
       
2.     பழைய ஏற்பாட்டில் எத்தனை கிதாபுகள் காணப்படுகின்றது?
       
3.     பழைய ஏற்பாட்டு கிதாபுகளின் நான்கு பெரும் பிரிவுகள் என்ன?
 
      
     

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *