ஏன் குர்-ஆனை அரபியில் மட்டும் படிக்கவேண்டும்?

[இரவு மணி 8, எல்லாரும் சாப்பிட்டாகிவிட்டது, அப்துல்லா கொஞ்சநேரம் தன் வீட்டு திண்ணையில் உட்கார வேளியே வந்தான், தன் நண்பன் அப்ரஹாம் வீட்டுபக்கம் திரும்பி பார்த்தான், அவனும் தன் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். இருவரும் ஒரே தெருவில் குடியிருக்கிறார்கள். அப்ரஹாமும் இவனைப் பார்த்தான், அப்ரஹாம் கையசைக்க, அப்துல்லா அவனைப்பார்க்க சென்றான்]

அப்துல்லா: என்னடா சாப்பிட்டாச்சா?

அப்ரஹாம்: இப்போ தான் முடிஞ்சுது, நீ சாப்பிட்டாயா?

அப்துல்லா: சாப்பிட்டேன். நான் கொடுத்த குர்-ஆனை படிச்சியா? இன்னிக்கு ஆபிஸ்லே கொஞ்ச நேரம் ஓய்வு கெடச்சது. அப்போ நீ குடுத்த புதிய ஏற்பாட்டை படிச்சேன். முதல் இரண்டு பக்கம் படிக்கிறதுக்குள்ளே, போதும் போதும் என ஆயிடுச்சி.

அப்ரஹாம்: [சிரிக்கிறான்] இனிமேல் தான் நீ தமிழை முழுசா கத்துக்கோ போறே.

அப்துல்லா: நீ மட்டும் என்னவாம். சுத்தமா ஒரு முஸ்லீம் பெயரைக் கூட உன்னால் சரியாக உச்சரிக்க முடியாது.

அப்ரஹாம்: சரி விடு, நீயாவது எனக்கு சொல்லக்கூடாது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? குர்-ஆன்லே முதல் பக்கம் திருப்புறேன், முதல் அதிகாரம் வரும் என்று பார்த்தா..! இன்டக்ஸ் வருது! யோசிச்சி பாத்ததிலே, அப்பரம் தான் புரிஞ்சுது, குர்-ஆனை இடது பக்கத்திலிருந்து அல்ல, வலது பக்கமாக படிக்கனும் என்று. எனக்கு நீ இங்லீஸ் மட்டும் இருக்கிற குர்-ஆன் குடுக்கக்கூடாது? ஏன்? அரபி/ஆங்கிலம் இருக்கிற குர்-ஆனை கொடுத்த.

அப்துல்லா: இப்போ என்கிட்டே இருக்கிறது அந்த குர்-ஆன் தான், அதுவும் எங்க சித்தப்பா, மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு போகும் போது அது குடுத்தாங்கலாம். வேறே இங்லீஸ் குர்-ஆன் வாங்கிக்கிலாம் விடு.

அப்ரஹாம்: சரி, என் கேள்விக்கு பதில் சொல்லு, சொல்லலே உன்னை விடமாட்டேன்.

1. ஏன் நீங்க எப்போதும் அரபியிலேயே குர்-ஆனை படிக்கிறீங்க?

2. புரியாத மொழியிலே நாம் படிச்சா, அல்லா சொன்ன செய்திகள் உங்களுக்கு எப்படி தெரியவரும்?

3. அல்லாவிற்கு அரபி தவிர வேறு மொழி தெரியாதா?

அப்துல்லா: உன் முதல் கேள்விக்கு பதில் சொல்றேன் கேளு. குர்-ஆனை எந்த மொழியிலேயாவது நாம் படிக்கலாம். ஆனால் அரபியிலே படித்தால் தான், அதிக நன்மைகள் வரும் என்று எங்க இமாம்கள், பெரியவங்க சொல்றாங்க.

அப்ரஹாம்: ஒரு வசனத்தின் பொருள் புரியாமல், பலமுறை படித்தாலும் அதனால் என்ன நன்மை சொல்லு? உதாரணத்திற்கு, நாம் எந்த பொருள் வாங்கினாலும், அதனோடுகூட ஒரு சின்ன புத்தகம் கொடுப்பார்கள். அந்த பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும், அது ரிப்பேர் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்யவேண்டும் போன்ற விவரங்கள் பல மொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் தமிழில் அல்லது நமக்கு தெரிந்த மொழியில் அந்த விவரங்களை படிப்போம், அப்பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும்  என்று தெரிந்துக் கொள்வோம்.

இதேபோலத் தானே வேதங்களும் பயன்படுகின்றன, நாம் எப்படி வாழவேண்டும், எப்படி சமுதாயத்தில் நடந்துக்கொள்ளவேண்டும் போன்றவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம்.

அப்துல்லா: இதற்காகத்தானே நாங்கள் மசூதிற்கு செல்கிறோம். அங்கு சொல்லப்படும் செய்திகளை நம்முடைய மொழியில் கேட்கிறோம். குர்-ஆனில் சொல்லப்பட்டதை அவர்கள் விளக்கிச் சொல்கிறார்கள். அறிஞர்கள் எழுதிய இஸ்லாமிய புத்தகங்களை படிப்போம்.

அப்ரஹாம்: அவர்கள் சொல்வதெல்லாம் சரியானது என்று அவர்கள் செய்திகளை சரிபார்ப்பது யார்? ஒவ்வொரு மனிதனும் தான் எதை நம்புகிறானோ, அதையே மற்றவர்களுக்குச் சொல்லுவான். உதாரணத்திற்கு ஒரு இமாம் ஜிஹாதில் அதிக கவனம் செலுத்துகிறவராக இருந்தால், அவர்களுடைய பேச்சு, செய்திகள் எல்லாம் அதைப்பற்றியே இருக்கும். வேறு ஒரு இமாம் தான் சமுதாயத்தில் சேவை செய்வதில் விருப்பமுடையவராக இருந்தால், அவருடைய எல்லா செய்திகளும், அதைச்சுற்றியே இருக்கும்.

இதில் பலியாவது யார் என்றால், இந்த செய்திகளை கேட்பவர்கள் தான். நாம் இப்போது இவைகளை செய்திகளில் பார்க்கிறோம். எல்லா இஸ்லாம் தீவிரவாதிகளும் உருவாவது மசூதியிலோ அல்லது மதரசாவிலோ? ஆனால் இங்கு இருக்கிற இஸ்லாம் அறிஞர்கள் “தீவிரவாதிகள் தவறு செய்கிறார்கள். குர்-ஆனை அவர்கள் தவறாக புரிந்துக்கொன்டார்கள்” என்று சொல்கிறார்கள். பழியை தீவிரவாதிகள் மீது போடுகிறார்கள்.

அப்துல்லா: நீ சொல்வதும் சரி தான். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமானாலும், கெட்டவர்களால் அது ஆளப்படும்போது, அதை சரி பார்த்து கேள்விகேட்டு, திருத்த அனுமதி மறுக்கப்படும்போது, உண்மையாகவே நன்மையை விட, தீமை தான் அதிகமாக நடக்கும். மதம் என்பது கத்தியைப் போன்றது. அது யாரிடம் உள்ளதோ, அவர்களைப் பொருத்தே அதன் பயன்பாடும் இருக்கும்.

உன்னுடைய இரண்டாவது கேள்வியும், முதல் கேள்வியும் ஒரேமாதிரி தான். நான் மூன்றாவது கேள்விக்கு பதில் சொல்கிறேன். இறைவனுக்கு மொழி என்பது ஒரு பிரச்சனையில்லை. எனவே அல்லாவிற்கு எல்லா மொழிகளும் தெரியும். எந்த மொழியில் நாம் பேசினாலும் அவனுக்குப் புரியும்.

அப்ரஹாம்: அப்படியானால் இதற்கு பதில் சொல்லு, ஒருவன் இஸ்லாமில் வருகிறான் என்று வைத்துக்கொள், அவன் தன் சொந்த மொழியில், அல்லாவிடம் நமாஜ் (தொழுகை) செய்யலாமா? நமாஜ் செய்யும்போது சொல்லப்படும் கலிமாக்கள் ( சூராக்கள், வசங்கள்) தன் தாய் மொழியில் சொல்ல அவனுக்கு அனுமதி உண்டா? அல்லது அவன் அரபியில் மட்டும் தான் தொழவேண்டுமா?

அப்துல்லா: அவன் தன் சொந்த பிரச்சனைகளுக்காக வேண்டிக்கொள்ளும்போது வேண்டுமானால் தன் தாய் மொழியில் வேண்டிக்கொள்ளலாம். ஆனால் தினமும் 5 வேளை தொழுவது மட்டும் அரபியில் மட்டும் தான் இருக்கவேண்டும்.

அப்ரஹாம்: ஏன்?

அப்துல்லா: குர்-ஆன் அரபியில் இறக்கப்பட்டது, அதனால் நாம் அரபியிலேயே தொழவேண்டும். மற்ற மொழியில் தொழுதால் அதன் தனித்தன்மை, இலக்கிய நடை பாதிக்கப்படும்.

அப்ரஹாம்: பொருள் முக்கியமா? இலக்கிய நடை முக்கியமா? பைபிள் எபிரேய, மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டாலும், “ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு”, “உன்னை பகைக்கிறவர்களுக்காக ஜெபம் செய்” போன்ற வசனங்கள், நம் தாய் மொழியில் படித்தால் தான் பிரயோஜனமே தவிர, இலக்கிய நடைக்காக நாம் கிரேக்க மொழியில் படிக்க முடியாது. அப்படி படித்தாலும் ஒரு நன்மையுமில்லை.

அப்துல்லா: சரி உனக்காகவாவது நான் இனிமேல் தமிழிலோ அல்லது இங்லீஸிலோ குர்-ஆன் படிப்பேன். சரியா? அடுத்த முறை நான் நிறைய விஷயங்கள் பைபிள் பற்றி கத்துகிட்டு வந்து, நான் கேள்வி கேட்கிறேன். நீ பதில் சொல்லு.

அப்ரஹாம்: எனக்காக படிக்க வேண்டாம், உனக்காக படி, குர்-ஆனில் என்ன இருக்கு? அல்லா என்ன சொல்றாறு? என்று தெரிஞ்சிக்கோ.

அப்துல்லா: சரி நான் வருகிறேன், மறுபடியும் பார்க்கலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்ரஹாம்: “வாஅலைக்கும் ஸலாம்” அரபியில் சொல்லிட்டேன் மன்னிக்கனும்,இதோ தமிழ் “உன் மீதும் சாந்தி உண்டாகட்டும்”

(நன்றி ஈஸா குர்-ஆன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *